உலகிலேயே முதலில் தோன்றிய குடியாக திகுழும் தமிழார்களுக்கும், பனை மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனை மரம் தமிழகத்தின் மாநில மரமாகவும் விளங்குகிறது. பனை மரம் தமிழர்களின் மொழியோடும், வாழ்வோடும் ஒன்றென கலந்தது என்பதற்குச் சான்றாக பல்வேறு சங்க கால நூல்களான திருக்குறள், தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனை மரத்தின் சிறப்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மாநில மரமாக அறியப்படும் பனையானது, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. பனை ஓலைச் சுவடிகள் மூலமாகவே நமக்கு பல இலக்கியங்களும் புராணங்களும் கிடைத்துள்ளன.
``நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பனை மரம் பூக்கிறது என்பதை நம்புவீா்களா..?"
பனை மரத்தில் மொத்தம் 34 வகையான பனை மரங்கள் உலகில் இருக்கின்றன. பனை மரத்தில் ஆண், பெண் என இரண்டு வகைகள் உள்ளன. அதில் தாளிப்பனை பூக்கும் இனத்தைச் சேர்ந்தது. இதை சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, கூந்தல் பனை, காலிப்பனை, விசிறிப்பனை, கூந்தற்பனை, தாளி, தாளம், ஆதம் குடைப்பனை என்ற பெயர்களாலும் பல்வேறு இடத்துக்கு ஏற்ற வகையில் அழைப்பது உண்டு. உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை தாளிப்பனை. தாளிப்பனையில் இருந்துதான் எழுதும் ஓலைச்சுவடிகளை உருவாக்கியுள்ளனா். வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டது. இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உயரத்தில், பல லட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும்.